Monday 30 July 2012

காவல் நிலையத்தில் புகார் அளிப்பது எப்படி? - ஒரு விரிவான அலசல் !

குற்ற விசாரணையின் முதல் படியாக கருதப்படும், பாதிக்கப்பட்டவரால் அளிக்கப்படும் புகார் மனு நீதி மன்ற விசாரணையின் போது மிக முக்கிய பங்காற்றுகிறது. ஒரு குற்ற நிகழ்வு குறித்து காவல் நிலையத்தில் பதிவு செய்யப்படும் புகார்தான் அந்த குற்ற நிகழ்வு குறித்த விசாரணையின் துவக்கப் புள்ளியாகும். சட்டரீதியாக ஒரு குற்ற நிகழ்வு குறித்த எவ்வகையிலாவது தகவல் அறியும் காவல் துறை அதிகாரி ஒருவர், அந்த நிகழ்வு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. ஆனால் நடைமுறையில் கொலை போன்ற கொடுங் குற்றங்களைத் தவிர மற்ற குற்ற நிகழ்வுகளில் தாமாகவே முன்வந்து நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறை அதிகாரிகள் ஆர்வம் காட்டுவது இல்லை. 



எனவே குறிப்பிட்ட ஒரு குற்ற நிகழ்வால் பாதிக்கப்படும் ஒருவர் அல்லது அவர் சார்பில் வேறொருவர் அந்த குற்ற நிகழ்வு குறித்த புகாரை காவல்நிலையத்தில் பதிவு செய்யலாம். காவல் துறையில் அளிக்கப்படும் புகார் மனு சாதாரண வெள்ளைத் தாளில் கையால் தெளிவாக எழுதப்பட்டு இருந்தாலே போதுமானது. புகார் பதிவு செய்யும் நபர் வசிக்குமிடம், புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள எதிரி வசிக்குமிடம், குற்ற சம்பவம் நடந்த இடம் ஆகிய ஏதாவது ஒரு இடத்தில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். 

புகார் மனுவில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் :

புகார் மனுவில், மனுதாரரின் பெயர், வயது, தந்தையார் அல்லது கணவர் பெயர், முழு முகவரி, தொடர்புக்கான தொலைபேசி எண் ஆகியவை முழுமையாக தரப்பட வேண்டும். பின்னர் புகார் மனுவை எந்த காவல் நிலையத்தி்ல் பதிவு செய்கிறோமோ அந்த காவல் நிலைய அதிகாரியை பெறுநராக குறிப்பிட வேண்டும். காவல் நிலையத்தில் பல படிநிலைகளில் அதிகாரிகள் இருந்தாலும், குற்ற நிகழ்வுகளில் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவல்துறை ஆய்வாளர் அல்லது துணை ஆய்வாளர் மட்டுமே அந்த புகாரை பரிசீலித்து முதல் தகவல் அறிக்கை தயாரிக்க முடியும். (ஒரு வேளை காவல்துறை ஆய்வாளர் அந்தப் புகாரை பதிவு செய்ய மறுத்தால் உயர் அதிகாரிகளை அணுகலாம்.)

குற்ற நிகழ்வு நடந்த இடம், நேரம் ஆகியவற்றுடன் குற்ற நிகழ்வு குறித்த முழுமையான விவரங்கள் புகாரில் இடம் பெற வேண்டும். எதிரி மிகவும் மோசமான வார்த்தைகளில் திட்டியிருந்தால் அதை குறிப்பிடுவது நல்லது. அதேபோல கொலை மிரட்டலோ வேறு வகை மிரட்டலோ விடுத்திருந்தாலும் அதையும் புகாரில் தெரிவிப்பது நல்லது. தாக்குதல் நடந்திருந்தால் அந்த தாக்குதல் எவ்வாறு நடந்தது, எந்தப் பொருளால் தாக்குதல் நடந்தது, அதனால் ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பதையும் புகாரில் கூற வேண்டும். திருட்டு, கொள்ளை போன்றவை நடந்திருந்தால் இழப்புகள் குறித்த முழு விவரங்களும் அளிக்கப்படவேண்டும். 

இவ்வகையான புகார்களில் எதிரிகளை அடையாளம் காட்டுவது, காவல்துறைக்கு மிகவும் உதவியாக இருக்கும். நமக்கு முன்பே தெரிந்த நபர்களை அவர்களுடைய பெயர், முகவரியோடு குறிப்பிட வேண்டும். பெயர் தெரியாத, ஆனால் அடையாளம் காட்டக்கூடிய நபர்களை பெயர் தெரியாத, நேரில் அடையாளம் காட்டக்கூடிய நபர் என்று தெளிவாக குறிப்பிட வேண்டும். முற்றிலும் அடையாளம் தெரியாத நபர் என்றால் 'அடையாளம் தெரியாத நபர்' என்று சொல்லலாம். தாக்குதல் போன்ற சம்பவங்களில் காவல் நிலையத்தில் புகார் அளிப்பது எந்த அளவு முக்கியமோ, அதே அளவுக்கு காயம் பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதும் முக்கியம். எனவே அவர்களை தாமதிக்காமல் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். காயம் பட்டவர் சார்பாக வேறு எவராவது காவல்நிலையம் சென்று புகார் அளிக்கலாம். 

காவல்நிலையத்தில் அளிக்கப்படும் புகாரில் கூறப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையிலேயே நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதால் புகாரில் இயன்றவரை முழுமையான, உண்மையான தகவல்களை தருவது நல்லது. புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சம்பவங்களின் இயல்புக்கு ஏற்ப உரிய நடவடிக்கைகளை காவல்துறையினர் சட்டப்படியாக மேற்கொள்ள வேண்டும். கொடுங்குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்வதில் நடவடிக்கை தொடங்கும். சாதாரண குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவரை விசாரணைக்கு வருமாறு அழைப்பதில் நடவடிக்கை தொடங்கும். 

இவ்வாறு காவல்நிலையத்தில் பதிவு செய்யப்படும் புகார்களை விசாரித்து தகுதியுடைய அனைத்து புகார்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை (First Information Report) தயாரிக்க வேண்டும் என்று குற்றவியல் நடைமுறைச் சட்டம் சொல்கிறது. ஆனால் நிர்வாக வசதி கருதி, தமிழ்நாடு காவல்துறையில் புகார்கள் மீது முதல் தகவல் அறிக்கை தருவதற்கு முன்பாக சமூக சேவைப் பதிவேட்டில் (Community Service Register) பதிவு செய்து அதற்கான ரசீது வழங்கும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. இதனை சட்டமோ, அரசாணையோ அங்கீகரிக்கவில்லை என்றாலும் பல நேர்வுகளில் நீதிமன்றம் இந்த முறையை ஏற்றுக் கொள்கிறது.

Saturday 14 July 2012

கீழை இளையவனின் 'பேசும் சட்டம்' - புதிய வலை தளம் துவக்கம் !

சட்டம் ஒரு இருட்டறை, அதில் வக்கீலின் வாதம் ஓர் ஒளிவிளக்கு" என்பது அறிஞர் அண்ணா அவர்களின் புகழ் பெற்ற சட்டம் குறித்த கருத்துரையாக இருக்கிறது. ஆனால் சட்டம் தெரியாது என்பதற்காக எந்த ஒரு குற்றச்சாட்டிலிருந்தும் எவர் ஒருவரும் தப்பிக்கவும் முடியாது, தண்டனை பெற்று விடவும் கூடாது.. எனவே நம் இந்திய திரு நாட்டின்  குடிமக்கள் அனைவரும் ஓரளவாவது சட்டம் தெரிந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றனர்.  



 
சட்டத்தில் பல்வேறு பிரிவுகள் இருந்தாலும் சாதாரண பொதுமக்களின் வாழ்வில் அன்றாடம் குறுக்கிடும் சட்டங்கள் "கிரிமினல் சட்டம்" என்று கூறப்படும் குற்றவியல் சட்டங்களும், 'சிவில் சட்டம்' என்று கூறப்படும் உரிமையியல் சட்டங்களுமே! சிவில் சட்டப் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்குத் தேவையான கால அவகாசம் ஓரளவுக்காவது வழங்கப்படுகிறது. ஆனால் குற்றவியல் சட்டப் பிரச்சனைகளை எதிர் கொள்வதற்கு பெரும்பாலான நேரங்களில் கால அவகாசம் இருப்பது இல்லை.

ஒரு குற்ற நிகழ்வில் நாம் தெரிந்தோ அல்லது தெரியாமலோ பாதிக்கப்படலாம். அல்லது அதனை சார்ந்து நிற்பவராக இருக்கலாம். அப்போது நமக்கு ஓரளவுக்கு கூட, சட்ட நடைமுறைகள் தெரியாமல் இருக்கும் போது, அந்த குற்ற நிகழ்வை ஏற்படுத்தியவர் மீது புகார் அளிப்பது எப்படி? அந்தப் புகாரை நிரூபிப்பது எப்படி? குற்றவாளிக்கு தண்டனை வாங்கித் தருவது எப்படி? நமது இழப்பிற்கான இழப்பீட்டை பெறுவது எப்படி? போன்ற பல்வேறு கேள்விகளுக்கான விடைகள் பலருக்கும் தெரிய வாய்ப்பு இல்லாமலே போகிறது.

அதேபோல ஒரு குற்ற நிகழ்வில் நாமும் உண்மையாகவோ, பொய்யாகவோ குற்றம் சாட்டப்படலாம். அவ்வாறு நம்மீது குற்றவியல் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் போது நமக்கான கடமைகள் என்ன? உரிமைகள் என்ன? என்பன போன்ற பல கேள்விகள் உள்ளன. பிரச்சனைகள் வந்து நம் வீட்டுக் கதவை தட்டிய பின்னர் அதற்கான தீர்வை தேடுவதை விட, பிரச்சனைகளை தவிர்த்து வாழ்வதே புத்திசாலித்தனமானது. அதையும் மீறி பிரச்சனைகள் வந்துவிட்டால் அதை எதிர் கொள்வதற்கான திறனை பெற வேண்டும்.

நம் வாழ்வோடு பிண்ணிப் பிணைந்து, தொடர்ந்து கொண்டிருக்கும் குற்றவியல் சட்டங்கள், சிவில் சட்டங்கள், சொத்துரிமை சட்டங்கள், விற்பனை சட்டங்கள், திருமண சட்டங்கள், காவல் நிலைய நடை முறைகள், நீதி மன்ற நடைமுறைகள், மனித உரிமை சட்டங்கள், நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள், நகராட்சி சட்டங்கள், தகவல் அறியும் உரிமை சட்டம் போன்ற  இன்றியமையாத பல சட்டங்கள் குறித்து ஒரு மேம்போக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எமது நோக்கம். எனவே இதில் சொல்லப்படும் வழிமுறைகள் அனைத்தும் பல சமயங்களிலும் சரியாக இருந்தாலும் கூட, தங்களுக்கு ஏற்படும் உண்மையான பிரச்சனைகளுக்கு அருகில் உள்ள வழக்கறிஞரின் உதவியை நாடுவதே முறையான அணுகுமுறையாக இருக்கும்.

"ஆயிரம் குற்றவாளிகள் கூட தப்பித்து விடலாம். ஆனால் ஒரு நிரபராதி கூட, தவறுதலாக தண்டனை பெற்று விடக் கூடாது." ஆகவே சட்டத்தின் சாராம்சங்களை புரிதலுடன், குறைந்தளவேனும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இதற்கான நல்ல நோக்கத்தில் இந்த கீழை இளையவன் 'பேசும் சட்டம்' வலை தள பக்கம் ஆரம்பிக்கப்படுகிறது. தொடர்ந்து வர இருக்கும் பதிவுகளை வாசிக்கும் வாசகர்கள் தங்களின் மேலான கருத்துக்களை பின்னூட்டமாக இட்டு, நம் நண்பர்கள் அனைவருக்கும் சேர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இந்த நல்ல தருணத்தில் இந்த வலை தள பக்கம் துவங்க ஊக்கம் அளித்த நண்பர்களுக்கும், பக்க பலமாய் ஆதரவு தரும் சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் திரு.பாலமுருகன் M.L.,, திரு.பி.சுந்தரராஜன் L.L.M., திரு.மு.வெற்றிச் செல்வன் M.L., (மக்கள் சட்டம்) ஆகியோர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் 

அன்புடன்
கீழை இளையவன் 'பேசும் சட்டம்' குழு.