Saturday 14 July 2012

கீழை இளையவனின் 'பேசும் சட்டம்' - புதிய வலை தளம் துவக்கம் !

சட்டம் ஒரு இருட்டறை, அதில் வக்கீலின் வாதம் ஓர் ஒளிவிளக்கு" என்பது அறிஞர் அண்ணா அவர்களின் புகழ் பெற்ற சட்டம் குறித்த கருத்துரையாக இருக்கிறது. ஆனால் சட்டம் தெரியாது என்பதற்காக எந்த ஒரு குற்றச்சாட்டிலிருந்தும் எவர் ஒருவரும் தப்பிக்கவும் முடியாது, தண்டனை பெற்று விடவும் கூடாது.. எனவே நம் இந்திய திரு நாட்டின்  குடிமக்கள் அனைவரும் ஓரளவாவது சட்டம் தெரிந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றனர்.  



 
சட்டத்தில் பல்வேறு பிரிவுகள் இருந்தாலும் சாதாரண பொதுமக்களின் வாழ்வில் அன்றாடம் குறுக்கிடும் சட்டங்கள் "கிரிமினல் சட்டம்" என்று கூறப்படும் குற்றவியல் சட்டங்களும், 'சிவில் சட்டம்' என்று கூறப்படும் உரிமையியல் சட்டங்களுமே! சிவில் சட்டப் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்குத் தேவையான கால அவகாசம் ஓரளவுக்காவது வழங்கப்படுகிறது. ஆனால் குற்றவியல் சட்டப் பிரச்சனைகளை எதிர் கொள்வதற்கு பெரும்பாலான நேரங்களில் கால அவகாசம் இருப்பது இல்லை.

ஒரு குற்ற நிகழ்வில் நாம் தெரிந்தோ அல்லது தெரியாமலோ பாதிக்கப்படலாம். அல்லது அதனை சார்ந்து நிற்பவராக இருக்கலாம். அப்போது நமக்கு ஓரளவுக்கு கூட, சட்ட நடைமுறைகள் தெரியாமல் இருக்கும் போது, அந்த குற்ற நிகழ்வை ஏற்படுத்தியவர் மீது புகார் அளிப்பது எப்படி? அந்தப் புகாரை நிரூபிப்பது எப்படி? குற்றவாளிக்கு தண்டனை வாங்கித் தருவது எப்படி? நமது இழப்பிற்கான இழப்பீட்டை பெறுவது எப்படி? போன்ற பல்வேறு கேள்விகளுக்கான விடைகள் பலருக்கும் தெரிய வாய்ப்பு இல்லாமலே போகிறது.

அதேபோல ஒரு குற்ற நிகழ்வில் நாமும் உண்மையாகவோ, பொய்யாகவோ குற்றம் சாட்டப்படலாம். அவ்வாறு நம்மீது குற்றவியல் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் போது நமக்கான கடமைகள் என்ன? உரிமைகள் என்ன? என்பன போன்ற பல கேள்விகள் உள்ளன. பிரச்சனைகள் வந்து நம் வீட்டுக் கதவை தட்டிய பின்னர் அதற்கான தீர்வை தேடுவதை விட, பிரச்சனைகளை தவிர்த்து வாழ்வதே புத்திசாலித்தனமானது. அதையும் மீறி பிரச்சனைகள் வந்துவிட்டால் அதை எதிர் கொள்வதற்கான திறனை பெற வேண்டும்.

நம் வாழ்வோடு பிண்ணிப் பிணைந்து, தொடர்ந்து கொண்டிருக்கும் குற்றவியல் சட்டங்கள், சிவில் சட்டங்கள், சொத்துரிமை சட்டங்கள், விற்பனை சட்டங்கள், திருமண சட்டங்கள், காவல் நிலைய நடை முறைகள், நீதி மன்ற நடைமுறைகள், மனித உரிமை சட்டங்கள், நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள், நகராட்சி சட்டங்கள், தகவல் அறியும் உரிமை சட்டம் போன்ற  இன்றியமையாத பல சட்டங்கள் குறித்து ஒரு மேம்போக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எமது நோக்கம். எனவே இதில் சொல்லப்படும் வழிமுறைகள் அனைத்தும் பல சமயங்களிலும் சரியாக இருந்தாலும் கூட, தங்களுக்கு ஏற்படும் உண்மையான பிரச்சனைகளுக்கு அருகில் உள்ள வழக்கறிஞரின் உதவியை நாடுவதே முறையான அணுகுமுறையாக இருக்கும்.

"ஆயிரம் குற்றவாளிகள் கூட தப்பித்து விடலாம். ஆனால் ஒரு நிரபராதி கூட, தவறுதலாக தண்டனை பெற்று விடக் கூடாது." ஆகவே சட்டத்தின் சாராம்சங்களை புரிதலுடன், குறைந்தளவேனும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இதற்கான நல்ல நோக்கத்தில் இந்த கீழை இளையவன் 'பேசும் சட்டம்' வலை தள பக்கம் ஆரம்பிக்கப்படுகிறது. தொடர்ந்து வர இருக்கும் பதிவுகளை வாசிக்கும் வாசகர்கள் தங்களின் மேலான கருத்துக்களை பின்னூட்டமாக இட்டு, நம் நண்பர்கள் அனைவருக்கும் சேர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இந்த நல்ல தருணத்தில் இந்த வலை தள பக்கம் துவங்க ஊக்கம் அளித்த நண்பர்களுக்கும், பக்க பலமாய் ஆதரவு தரும் சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் திரு.பாலமுருகன் M.L.,, திரு.பி.சுந்தரராஜன் L.L.M., திரு.மு.வெற்றிச் செல்வன் M.L., (மக்கள் சட்டம்) ஆகியோர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் 

அன்புடன்
கீழை இளையவன் 'பேசும் சட்டம்' குழு.

No comments:

Post a Comment